ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு பொதுவான கோரிக்கை விடுத்தால், அது குறித்து ஆராய்ந்து பார்க்க முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
காலம் தனக்கு வழங்கும் எந்த பொறுப்பாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் மட்டுமல்லாது மாகாணசபை தேர்தலும் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். பதவிக்காலம் முடிந்துள்ள மாகாணசபைகளின் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றேன்.
நான் இதுவரை எந்த பதவியையும் கோரி பெற்றுக்கொண்டதில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மேயராகவும், கட்சியின் தவிசாளராகவும் பிரதித் தலைவராகவும் வெளிநாட்டு தூதுவராகவும் அமைச்சராகவும் பதவிகளை வகித்துள்ளேன்.
தற்போது சபாநாயகராகவும் பதவி வகிக்கின்றேன். இந்த பதவிகள் நான் கேட்டு பெற்றுக்கொண்ட பதவிகள் அல்ல. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு என்னிடம் கோரப்படவில்லை.
நாட்டின் ஜனநாயகத்திற்காக அப்படியான கோரிக்கை விடுக்கப்படுமா என்பதை எதிர்காலத்தில் பார்க்கலாம்.
பதவிகளுக்காக நான் போட்டிப் போடப் போவதில்லை. நான் போட்டியிட வேண்டும் என்று பொதுவான கோரிக்கை விடுக்கப்பட்டால், அதனை ஆராயலாம் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.