அமைச்சர் சுஜீவ சேனசிங்க தனது சவாலை ஏற்றுக் கொண்டு அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயர் ஊழல் மோசடியுடன் சம்பந்தப்பட்டதாக இடம்பெற்றுள்ளது. இதனை ஏற்றுக் கொண்டு அமைச்சர் சுஜீவ சேனசிங்க சவாலை அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வேட்பாளர் சஜித் பிரேமதாச எந்தவித ஊழல் மோசடியுடனும் தொடர்பற்றவர் எனவும், அவரது ஊழல் மோசடியை நிரூபிப்பது எப்படிப் போனாலும், குற்றச்சாட்டு ஒன்றை அவர் மீது முடியுமானால் முன்வையுங்கள். அவ்வாறு முன்வைத்தால், தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவேன் என பகிரங்கமாக அரசியல் மேடையில் அவர் கூறிய கருத்தையும் உதய கம்மம்பில எம்.பி. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் போட்டுக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.