தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலிக்க வேண்டும் என்றால் தனித்துவமான நடிப்புத் திறன் வேண்டும் என்பது ரசிகர்கள் விதித்திருக்கும் மரபு.
இதனை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சர்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா எனும் கதாபாத்திரத்தினை ஏற்று, தன் அபிரிமிதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன்.
அதனைத் தொடர்ந்து பா. ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’, அருள்நிதி நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’, வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘அநீதி’ ஆகிய படங்களில் நடித்த துஷாரா விஜயன்… தற்போது தனுஷ் நடிப்பில் தயாராகும் ‘ராயன்’ எனும் திரைப்படத்திலும், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் ‘வேட்டையன்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
முன்னணி நட்சத்திர அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கும் நடிகை துஷாரா விஜயன்.. அடுத்ததாக நடிப்பு ராட்சசன் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘சீயான் 62’ திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 62’ எனும் திரைப்படத்தில் ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் லேட்டஸ்டாக நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். எக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் வெளியீட்டினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, ‘சித்தா’ எனும் வெற்றி படத்தை வழங்கிய இயக்குநர் அருண்குமாருடன் ‘சீயான்’ விக்ரம் மற்றும் திறமையான முன்னணி நட்சத்திர கலைஞர்கள் இணைந்திருப்பதால், ‘சீயான் 62’ படத்திற்கும் தற்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.