ஹிந்தியில் சல்மான்கான் நடித்த ‘தபாங்’ படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றிபெற்ற நிலையில் தற்போது ‘தபாங்-3’ படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மூன்றாம் பாகத்தை நடிகர் பிரபுதேவா இயக்குகிறார்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் மகேஸ்வர் பகுதியில் நர்மதா ஆற்றங்கரையில் படப்பிடிப்பு நடைபெற்றபோது அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தியதாக சல்மான்கானுக்கு இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் அந்தப்பகுதி காவல் துறையினர் தாங்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு கொடுத்த விதிமுறைகளை மீறினால் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய நேரிடும் என்றும் படக்குழுவினரை எச்சரித்துள்ளனர்.
மகேஸ்வர் எம்.எல்.ஏ இந்த நிகழ்வு பற்றி கூறும்போது, “நாங்கள் எங்கள் மகேஸ்வர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்துவதற்காக தான் ‘தபாங்-3’ படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தோம். தற்போது நடைபெற்றுள்ள நிகழ்வுகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.