சிறிய தந்தையார் அடித்து துன்புறுத்திய நிலையில் சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக சிறுவனை அடித்து துன்புறுத்தியுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
குருமன்காடு பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் குடும்பம் ஒன்று தங்கியிருந்தது. இந்த வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவன் வேறு திருமணம் செய்த நிலையில் தற்போது அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.
முன்னைய திருமணத்தின் போது பெண்ணுக்கு 4 வயது சிறுவன் ஒருவர் உள்ளான். அந்த சிறுவனை தற்போது திருமணம் செய்த இளைஞன் (சிறிய தந்தை) அடித்து துன்புறுத்தியுள்ளார்.
அந்த சிறுவனை பார்க்கும் போது முன்னைய கணவரின் ஞாபகம் வருவதாக கூறி சிறுவனை அடித்து துன்புறுத்துவதாக தெரியவருகிறது.
இதனால் சிறுவனின் கன்னம், முதுகு, கண் ஆகிய பகுதிகளில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் வேலைக்குச் சென்ற ஒருவர் இதனை அவதானித்து சிறுவனை மீட்டு தனது நண்பர்களின் உதவியுடன் வவுனியா பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த வவுனியா பொலிஸார் சிறுவனை வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் சிறுவனை தாக்கிய சிறிய தந்தையாரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.