13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்ப டுத்தவேண்டும். இதனூடாக தமிழ் மக்களின் பிரச்சி னைக்குத் தீர்வு காணப்படவேண்டும். எந்தவொரு செயற்பாடாக இருந்தாலும் பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படவேண்டும்.
இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
–
புதிய அரசமைப்பு வெளிப்படையாக முன்னெடுக்கப்படவேண்டும். அதனை மறைத்துச் செயற்படுத்துவதன் ஊடாக பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படும். சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டால் புதிய அரசமைப்பு உருவாக்கத்தை நகர்த்த முடியாது. அனைத்துத் தரப்பினரும் அவதானமாக இருக்கவேண்டும்.
தற்போதைய நிலமையில் அரசு முன்னெடுக்கப்படும் புதிய அரசமைப்புத் தயாரிக்கும் பணிகளானது பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகத்தை தோற்றுவிப்பனவாக அமைந்துள்ளது.இந்தச் செயற்பாடுகளை வெளிப்படையாக முன்னெடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். நாடாளுமன்றத்தில் நான் இந்த விடயத்தை வெளிப்படுத்தியமைக்காக அதிகாரப் பகிர்வுக்கு எதிரானவன் என்று என்னை யாரும் கருதிவிடக்கூடாது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். எமது சிறிலங்கா சுதந்திரக்கட்சி இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது.
அதனை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாடானது பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கவேண்டும். மாறாகச் சந்தேகத்தை தோற்றுவித்துவிடக்கூடாது.
அரசமைப்பைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடும் சிலர் செயற்படும் விதம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சந்தேகத்தை தோற்றுவிப்பதாக அமைந்திருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். உண்மையான அதிகாரப்பகிர்வுக்காக குரல்கொடுக்கும் நாங்கள் தர்மசங்கடமான நிலைமைக்கு உள்ளாகின்றோம் – என்றார்.
வழிநடத்தல் குழுவின் கடந்த அமர்வில் நிபுணர் குழு சமர்பித்த அறிக்கையை மையப்படுத்தி நாடாளுமன்றில், தயாசிறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். தற்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.