சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாகத் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்கல் அறிவித்துள்ளார்.
தனது வேகப்பந்துவீச்சால் பல்வேறு அணிகளைத் திணறடித்தவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்கல். 2006-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், பிற்காலத்தில் ஸ்டெய்னுடன் கூட்டணி அமைத்து எதிரணிகளைத் திணறடித்தார். கடந்த 12 வருடங்களாக வெற்றிகரமான பௌலராக இருந்த இவர், இதுவரை 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மூன்றுவிதமான போட்டிகளிலும் சேர்த்து 529 வீழ்த்தியுள்ள இவர் தற்போது தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். ஆம், வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக மோர்னே மார்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தெரிவித்துள்ள அவர்
, “இனி கிரிக்கெட்டில் எனக்கு இடமில்லை என்று நினைக்கிறேன். இது ஒரு மிகக் கடுமையான முடிவு. ஆனால், ஒரு புதிய அத்தியாயம் தொடங்க இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். எனக்கென்று மனைவி, குடும்பம் இருக்கிறது. தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வருவது கஷ்டமாக இருக்கிறது. இதனால் இந்தக் கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் ஜெர்ஸி அணிந்து விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் நான் நேசித்தேன்.
இத்தனை வருடம் எனக்கு ஆதரவளித்த சக வீரர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், கிரிக்கெட் போர்டு உறுப்பினர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது கவனம் முழுவதும் எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடரில்தான் இருக்கிறது” என்றார்.