இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 11வது சீசன், வரும் ஏப்., 7ல் துவங்குகிறது. சூதாட்ட தடையில் இருந்து மீண்ட சென்னை, ராஜஸ்தான் அணிகள், இரு ஆண்டுக்குப் பின் மீண்டும் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலத்தில், தமிழகத்தின் ‘நம்பர்–1’ வீரர், சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், ரூ. 7.6 கோடிக்கு, பஞ்சாப் அணிக்கு சென்றார்.
இந்த அணிக்கு, கடந்த சீசனில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், கேப்டனாக இருந்தார். அஷ்வின் பஞ்சாப் அணிக்கு சென்றதால், கேப்டன் ஆகலாம் என, கூறப்பட்டது. தற்போது, இதற்கான அறிவிப்பு வெ ளியானது. வரும் சீசனில், பஞ்சாப் அணி கேப்டனாக அஷ்வின் செயல்படவுள்ளார். பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் ஏப்.,8ல் டில்லியை எதிர்த்து விளையாட உள்ளது.
முதன் முறை
ஐ.பி.எல்., தொடரில் 2008 முதல் 2015 வரை என, 8 ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாடினார் அஷ்வின். கடந்த இரு சீசனில், புதிதாக வந்த புனே அணிக்கு சென்றார். முதன் முறையாக வரும் தொடரில் கேப்டனாக செயல்பட உள்ளார்.