விம்பிள்டன் உள்பட ஐந்து கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்; உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுள் ஒருவர்; செரீனா வில்லியம்ஸுடன் போட்டிபோட தகுதியானவர்; விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை… இன்னும் எத்தனையோ, மரியா ஷரபோவாவை குறிப்பிடச் சொல்லப்பட்டவை. 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டார். `மெல்டோனியம்’ எனும் மருந்தை அவர் பயன்படுத்தியதாக ஆய்வுகள் தெரிவித்தன. அந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அந்த மருந்து தடைசெய்யப்பட்டது. ஆய்வு நடந்தது ஏப்ரலில். அவரோ, தான் அந்த மருந்தை கடந்த பத்து ஆண்டுகளாக தனது மருத்துவத்துக்காகப் பயன்படுத்துவதாகவும், இதை தடைசெய்தது தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்தார். ஆனாலும், தடை நீங்கவில்லை.
மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளின் இதயத் தசைகளுக்கு ரத்தத்தை அதிகம் எடுத்துச் செல்வதற்குப் பயன்படும் மருந்துதான் `மெல்டோனியம்’. இது, பக்கவாதம் வந்த நோயாளிகளுக்கு மூளைக்குச் செல்லும் ரத்தத்தை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது. மெல்டோனியம், தசைகளுக்கு ரத்தம் மற்றும் ஆக்சிஜன் எடுத்துச்செல்லும் தன்மையை அதிகப்படுத்துவதால், விளையாட்டு வீரர்கள் தங்கள் தசைகளின் திறனை அதிகப்படுத்த இந்த மருந்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்று கூறி, ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு 2016-ம் ஆண்டில் இந்த மருந்தைப் பயன்படுத்த தடைவிதித்தது. இந்த ஊக்கமருந்து, ரஷ்யாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
ஷரபோவாவைத் தொடர்ந்து, இந்தியத் தடகள வீரர் ஜிதின் பால் கரியரை முடக்கியுள்ளது இந்த மெல்டோனியம். 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீரரான ஜிதின் பால், தடைசெய்யப்பட்ட மெல்டோனியம் வைத்திருந்ததாக தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் ஒழுங்குக் குழு கண்டறிந்து, அவரைப் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது.