ஆந்திர மற்றும் தமிழ் பட உலகில் இருக்கும் இயக்குநர்கள் பலரும், தனக்கு நடிப்பதற்கான வாய்ப்பைத் தருவதாகச் சொல்லி, தங்கள் பாலியல் இச்சையைத்தான் என்னிடம் தணித்துக் கொண்டனர்; ஆனால், எனக்கு கடைசி வரை வாய்ப்பே வழங்கவில்லை என, பச்சையாக படுக்கையறை சமாச்சாரங்களை பேசத் துவங்கினார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
துவக்கத்தில் இதை கண்டுகொள்ளாமல் இருந்த பட உலகத்தினர், இவரது அதிரடிகள் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி என பட்டியல் நீண்டு கொண்டே போனதும் அதிர்ச்சி அடைந்தனர். அதை நிறுத்த முயற்சிக்கும் போது, ஸ்ரீ ரெட்டி தன்னை நோக்கியும் சுட்டு விரல் நீட்டினால் என்ன செய்வது என புரியாமல் தடுமாறினர்.
ஒரு கட்டத்தில் தன் பிரச்னையை தானே தீர்த்துக் கொண்டு விடுவோம் என களம் இறங்கினார் ராகவா லாரன்ஸ். ஸ்ரீரெட்டிக்கு என்னுடைய அடுத்தப் படத்தில் வாய்ப்பளிக்கிறேன் என்று சொல்லி பரபரப்புக்கும்; அதிரடிக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து, சென்னை, வளசரவாக்கத்தில் வீடு எடுத்து தங்கியிருக்கும் ஸ்ரீ ரெட்டி, ராகவா லாரன்சின் பட அழைப்புக்காக காத்திருக்கிறார். அதிரடியாக பேசிய, சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஸ்ரீ ரெட்டியின் கை சும்மா இருக்குமா? எதையாவது அதிரடியாக பதிவிட்டு, அதிர்ச்சி கிளப்பிக் கொண்டேதான் இருக்கிறார்.
லேட்டஸ்ட்டாக, அவர் பதிவு: இங்கே, பெரிய நடிகர்களாக சொல்லப்படுகிறவர்களெல்லாம், தங்கள் பாலியல் இச்சைக்காக, நடிகை சில்க் ஸ்மிதாவை பயன்படுத்தியவர்கள்தான். அப்படிப்பட்ட சைக்கோக்களை ஒருநாளும் ஆளுமைகள் என ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி சதை திண்ணும் மனிதர்களின் அரசியல் விளையாட்டுக்களுக்கு மத்தியில், சில்க் ஸ்மிதாவை நாம் இழந்து விட்டோம். அவர் ஒரு மாபெரும் நடிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு பெண் விருப்பப்பட்டோ அல்லது வற்புறுத்தல் காரணமாகவோ, ஒரு ஆணுடன் படுக்கையை பகிந்தால், அந்தப் பெண்ணை சமூகம் தவறாகப் பேசுகிறது. ஆனால், அதே ஆண், அதே காரியத்தைச் செய்தால், அவனை ஒருவரும் கண்டுகொள்வதில்லை. இது தான் சமூகம். இதுதான் பார்வை. ஆக, சமூகத்தின் பார்வையில் தான் கோளாறு இருக்கிறது. இது மாற வேண்டும்.
இவ்வாறு அவர் மேலும் கூறியிருக்கிறார்.