நாட்டின் விமானப் படைக்கு எந்தவித யுத்த விமானமோ, கடற்படைக்கு எந்தவித யுத்தக் கப்பலோ கொள்வனவு செய்வதற்கு தேவையான எந்தவொரு அமைச்சரவைப் பத்திரமும் கடந்த 4 ஆண்டு காலப் பகுதியில் முன்வைக்கப்படவில்லையென உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்குக் காரணம், இலங்கை கடற்படைக்கு சீனாவிலிருந்து சகல வசதிகளும் கொண்ட கப்பலொன்று இலவசமாக கிடைக்கப் பெற்றமை ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அமெரிக்கா வழங்கிய யுத்தக் கப்பல் தற்பொழுது ஹவாய் கடற்படை மத்திய நிலையத்தை அடைந்துள்ளது.
அத்துடன், இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடாகியுள்ள இரு கப்பல்களும் கோவாவில் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு இலவசமாக கப்பல்களை வழங்க பல நாடுகள் முன்வந்ததனால், பணம் கொடுத்து வாங்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. கடந்த 4 வருடங்களும் அமைச்சரவை கவனம் செலுத்தாமைக்கு இதுவே காரணம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அமைச்சரவையில் ரஷ்யாவிடமிருந்து யுத்த விமானமொன்றைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்ட போதிலும், அதனை விட குறைந்த விலையில் சுவீடனிடமிருந்து யுத்த விமானம் கொள்வனவு செய்யலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.