ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 95 ரன் (70 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசியும், மற்ற வீரர்கள் கை கொடுக்காததால் வெற்றி வாய்ப்பு கை நழுவியது. ஸ்டாய்னிஸ் (11) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
தனி வீரராக கடைசி வரை போராடிய ராகுலின் ஆட்டத்தை பாகிஸ்தானை சேர்ந்த டிவி செய்தியாளர் ஜைனப் அப்பாஸ் வெகுவாகப் பாராட்டி உள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ‘ராகுல் ஆட்டம் மிக அற்புதம். பந்தை எதிர்கொண்ட டைமிங் அருமை. பார்க்கப் பார்க்க பரவசம்’ என்று தகவல் பதிந்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.