தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் உற்றார் உறவினர்களோடு தன் வீட்டருகே கட்டியிருக்கும் பழனி ஆண்டவர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தார். இதில் ஏராளமான உள்ளூர் வாசிகளும் கலந்துகொண்டார்கள். பிறகு, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்தார்.
முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா நெடுங்குளம் கிராமம். இங்கு தன் வீட்டுக்கு அருகே பழனி ஆண்டவர் முருகன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் அவர் குடும்பத்துக்கும், பங்காளிகள் குடும்பத்துக்கும் பாத்தியப்பட்டது. இந்தப் பழனி ஆண்டவர் முருகன் கோவிலை எடப்பாடி பழனிசாமி அமைச்சர் ஆவதற்கு முன்பே கட்டினார்.
கோவில் கட்டி 12 வருடங்கள் நிறைவுற்ற நிலையில், இன்று காலை அந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது மனைவி ராதா, மகன் மிதுன்குமார், மருமகள் திவ்யா பேரன் ஆதித்தன் மற்றும் உறவினர்களும் கலந்துகொண்டார்கள். அர்ச்சகர்கள் கோபுரக் கலசத்தின் மீது அர்ச்சனை தூவி கொண்டிருக்க எடப்பாடி பழனிசாமியும் அவரது குடும்பத்தினரும் கோபுரத்தைப் பார்த்து தரிசனம் செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சரின் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களான தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். பிறகு, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்குக் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தார்கள். மற்றவர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.