யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரைத் தாக்கியமை மற்றும் கொக்குவிலில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் நேற்று இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் நேற்று முற்படுத்தப்பட்ட னர்.
சந்தேகநபர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை பாதுகாப்புக் கமரா காணொலிப் பதிவுகள் ஊடாக நிரூபிக்க முடியும் என யாழ்ப்பாணம் பொலிஸார் வழங்கிய உறுதிமொழியை அடுத்து சந்தேகநபர்களை எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறிய லில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.
கொக்குவில் பிரம்படி லேன், புது வீதி ஆகிய இடங்களிலுள்ள 2 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுப்பட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது.வண்ணார்பண்ணை வடகிழக்கு (ஜே/100) கிராம அலுவலரை அவரது அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டியமை – அவரது அலுவலக பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை மற்றும் கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து வானுக்குத் தீவைத்து அடாவடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக் களில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நான்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருவேறு வழக்குகளின் கீழ் சந்தேகநபர்கள் இருவரும், யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட னர்.
“கொக்குவிலில் ஆவா குழு உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து சந்தேகநபர்களில் ஒருவர் அடாவடியில் ஈடுபட்டுள்ளார். வீடுகளுக்குள் புகுந்து வன்முறைகளில் ஈடுபட்ட 3 சம்பவங்களும் இரண்டு குழுக்க ளுக்கிடையிலானவை” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.
சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட் டுக்களை நிரூபிக்க முடியுமா? என்று மன்று கேள்வி எழுப்பியது.
“சம்பவ இடங்களுக்கு அண்மையிலுள்ள பாதுகாப்புக் கமராக்களின் காணொலிப் பதிவுகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் சந்தேகநபர்கள் உள்ளனர். அதனடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.
பாதுகாப்புக் கமரா பதிவை எதிர் வரும் வெள்ளிக்கிழமை மன்றில் முன்வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான், அன்றுவரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைத்து வழக்கை ஒத்திவைத்தார்.