செம்மணி வீதியில், கிட்டுப் பூங்காவுக்கு அருகில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக நேற்று மாலை 6.20 மணியளவில் இளைஞர் குழு குழப்பத்தில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இது தொடர்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் தெரிவித்ததாவது,
செம்மணி வீதியில் நீர்பாசன் குழாய்களை நிலத்தில் புதைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிடங்கு தோண்டும் பணியில், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் இரண்டு ஜே.சி.பி. இயந்திரங்கள் நேற்று மாலையும் ஈடுபட்டன. இதன்போது அந்த வீதியால் உழவு இயந்திரம் வந்துள்ளது.ஜே.சி.பி. இயந்திரத்தினால் கிடங்கு தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்போது உழவு இயந்திர சாரதிக்கும், அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெரும்பான்மையின பணியாளர்களுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் அந்தப் பகுதியில் சுமார் 10 இளைஞர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அனைவரும் 30 வயதுக்கு குறைவானர்கள். அவர்களது கையில் பொல்லு, தடி இருந்தது. ஜே.சி.பி. இயந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்தக் குழப்பங்களைத் தடுக்கச் சென்ற மதகுரு ஒருவர் இளையோரால் அவமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் அவர்கள் உடனடியாக அங்கு வரவில்லை.
ஜே.சி.பி. இயந்திரம் தாக்கப்பட்டும், அதில் பணிபுரிந்த பெரும்பான்மையினப் பணியாளர் காயமடைந்தும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாகவே பொலிஸார் அங்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர் –– என்றார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.