இந்தியாவில் நடத்தப்படும் முதல் தர ஒருநாள் கிரிக்கெட் தொடரான தியோதர் டிராபி 1973-ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு முறையும் பல மாற்றங்கள் செய்து தியோதர் டிராபி கோப்பை நடத்தப்படுவது வழக்கம்.கடந்த 2014-ஆம் ஆண்டு வடக்கு,தெற்கு,கிழக்கு,மேற்கு மற்றும் மத்தி என 5 பகுதிகளாக அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தியோதர் டிராபியில் மேலும் பல மாற்றங்கள் புகுத்தப்பட்டு 3 அணிகளாக குறைக்கப்பட்டன. இந்தியா ‘ஏ’,இந்தியா ‘பி’ மற்றும் விஜய் ஹசாரே கோப்பையை வென்ற அணி என மூன்று அணிகளாக மாற்றியமைத்தது.இதே அணிகள் முறையை நடப்பாண்டிலும் பின்பற்ற போவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான தியோதர் டிராபி தொடர் மார்ச் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை தரம்சாலாவில் நடைபெறுகிறது.இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய ‘ஏ’ அணியின் கேப்டனாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை பிசிசிஐ நியமித்தது.தற்போதய சூழ்நிலையில் அஸ்வின் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். அஸ்வினுக்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் ஓய்வு தேவை என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.இதனால் தியோதர் டிராபியில் இருந்து விலகுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.அஸ்வினுக்கு அங்கீத் பாவ்னே புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.மாற்று வீரராக சபாஷ் நதீம் அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்திய ‘பி’ அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரும்,விஜய் ஹசாரே சாம்பியனான கர்நாடகா அணிக்கு கருண் நாயரும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.