ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆய்வுகூடத் திறப்பு விழாவிற்கு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்யவுள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஏ9 வீதியின் புனித பத்திரிசியார் கல்லூரிச் சந்திப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.யுத்த காலத்திற்கு முன்னரும் அதற்கப் பிற்பட்ட காலத்திலும் இராணுவத்திடம் நேரடியாகக் கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலமாக வடக்கு கிழக்கில் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எந்தவித தீர்வும் கிடைக்காத நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், புனித பத்திரிசியார் கல்லூரி நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையில், பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.அத்துடன் கல்லூரிக்குள் உட்பிரவேசிக்க முயற்சித்த போதிலும் அதற்கு பொலிஸார் இடமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.