காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தேவை அனுதாபமல்ல தீர்வேயென காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களில் ஒருவரான ஜெயதீபா புண்ணியமூர்த்தி தெரிவித்தார்.
அத்தோடு, காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் வரை காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் வழங்கிய முறைப்பாடுகள் எவற்றையும் உரிய அரச நிறுவனங்கள் கருத்திற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வொன்று வெள்ளிக்கிழமை காணாமல்போனோர் அலுவலகத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “பலவருட காலமாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு உதவுவதற்கான எவ்வித கட்டமைப்புக்களும் இருக்கவில்லை.
தற்போது அவ்வெற்றிடத்தை காணாமல்போனோர் குறித்த அலுவலகம் பூர்த்தி செய்துள்ளது. இவ்வலுவலகம் ஸ்தாபிக்கப்படும்வரை காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் வழங்கிய முறைப்பாடுகளை உரிய அரச நிறுவனங்கள் எவையும் பெரியளவில் கருத்திற்கொள்ளவில்லை.
என்னுடைய கணவர் காணாமலாக்கப்பட்டபோது, நான் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் எனது கணவருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறதா என்று கேட்டார்கள். உண்மையில் அரச நிறுவனங்கள் எமக்கு எது தேவை என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. எம்மைப் பார்த்து அனுதாபப்படத் தேவையில்லை. எமக்கு பதிலும் தீர்வுமே வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.