சிறந்ததோர் எதிர்கால தலைமுறையை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு கல்வி துறையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கொள்கை கோட்பாடுகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாரணர் இயக்கத்தில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெயாங்கொட சியனே தேசிய கல்வி கல்லூரியில் நேற்று இடம்பெற்ற 12ஆவது தேசிய சாரணச் சிறுவர் முகாமின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
சாரணர் இயக்கத்தை விரிவுபடுத்தும்போது குறைந்தது அது பாடசாலை பிள்ளைகளில் 25 வீதத்தையேனும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒழுக்க பண்பாடுகளினால் வளம்பெற்ற எதிர்கால தலைமுறை ஒன்றை கட்டியெழுப்புவதற்கு சாரணர் இயக்கம் மிகவும் முக்கியமானதென தெரிவித்துள்ளார்.
இலங்கை சாரணர் தலைமையகத்தின் மூலம் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தேசிய மட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும் தேசிய சாரணச் சிறுவர் முகாம் ‘எமது தாய் நாடு எமது மரபுரிமை’ என்ற கருப்பொருளின் கீழ் இன்று முதல் ஏப்ரல் 08ஆம் திகதி வரை வெயாங்கொட சியனே தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெறுகின்றது.
இந்த முகாமில் நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தந்துள்ள 07 வயதுக்கும் 11 வயதிற்கும் இடைப்பட்ட 7500 சாரணச் சிறுவர்களும் சுமார் 750 ஆசிரியர்களும் கலந்துகொண்டுள்ளதுடன், முதல் முறையாக தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த சாரணச் சிறுவர்களும் சுமார் 300 சாரண தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னபெரும, நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன, தலைமை சாரணர் ஆணையாளர் பொறியிலாளர் மெரில் குணதிலக்க உள்ளிட்ட உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

