உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிங்களக் கட்சிகள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளன. உள்ளூராட்சித் தேர்தலில் அதிகூடிய சபைகளைக் கைப்பற்றிய மகிந்த அணி அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தத் தேர்தல் முறைமையில் மாற்றம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராசா இது தொடர்பில் தெரிவித்ததாவது,
முன்னைய தேர்தல் முறைமையில் ஒரு கட்சி கூடிய ஆசனங்களைப் பெற்றுச் சபையைக் கைப்பற்றும். தேர்தல் ஆணையாளர் அந்தக் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பார். இதுதான் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜனநாயக வழமை. இது தற்போது மாற்றப்பட்டுள்ளது.
பல பிரதே சபைகளில் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய கலப்புத் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் – என்றார்.
ஈ.பி.டி.பி.யின் செயரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது, இந்த முறையில் சாதகமும் இருக்கின்றது, பாதகமும் இருக்கின்றது. வட்டாரத்தில் ஒருவர் நிறுத்தப்படுகின்றார். அவர் அந்த வட்டாரத்துக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவராகின்றார்.
இதேவேளை இம்முறை வட்டார முறையில் தேர்தல் இடம்பெற்றிருந்தாலும், குத்துவெட்டுக்கள் அடிபிடிகள் இடம்பெற்றிருந்தன. வட்டார முறையிலேயே நிலமை இப்படி என்றால், விகிதாசார முறையில் மாத்திரம் தேர்தல் நடந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் ? என்று கேள்வி எழுப்பினார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்ததாவது,–கலப்புத் தேர்தல் முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். கலப்பு முறையில் உள்ளடக்கப்பட்டுள்ள விகிதாசாரத்தின் ஊடாக சபைகள் தனித்து இயங்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.
அறுதிப் பெரும்பான்மை எந்தக் கட்சிகளுக்கும் கிடைக்காத நிலமை காணப்படுகின்றது. சுயேச்சைக் குழுக்கள், சிறிய கட்சிகள் ஆசனங்களைப் பெற்றுள்ளார்கள். எதிர்காலத்தில், சபைகளை உறுதியாக அமைக்கக் கூடியவாறான வகையில் கலப்புமுறையில் உள்ள விகிதாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும் – என்றார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்டத்தில் களமிறங்கிய சுயேச்சைக் குழுவின் அமைப்பாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்ததாவது–
முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் காலத்தில் இருந்த தேர்தல் முறைமை தொடர்பான சட்டத்தில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. சிறிய கட்சிகளுக்கும், சிறுபான்மைக் கட்சிகளுக்கும் உரிய இடம் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த முறைமை தேசியக் கட்சிகளுக்குப் பாதிப்பானதுதான். இந்த முறையினால் சபைகளில் உறுதியான ஆட்சி அமைக்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டும். சபைகளில் உறுதியான ஆட்சி இடம்பெறக் கூடியவாறாக, தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் – என்றார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்ததாவது, உள்ளூராட்சி சபை தேர்தல் முறை தொடர்பில் சில சாதகமான விடயங்களும் பாதகமான விடயங்களும் காணப்படுகின்றன. சாதகமான விடயங்களாக, முன்னைய காலத்தில் உள்ளூராட்சி சபைகளில் அபிவிருத்திகளுக்கு வரையறை இல்லாது இருந்தது.
ஒரு உறுப்பினர் அந்தச் சபைக்கு உட்பட்ட எங்கும் அபிவிருத்தி செய்யலாம். ஆனால் இப்பொழுது வட்டார ரீதியாக உள்ளதால் வெற்றி பெற்ற வேட்பாளர் தனது வட்டாரத்தின் அபிவிருத்திகளை இலக்கு வைத்து பணியாற்ற முடியும்.
விருப்பு வாக்கு முறை இல்லாததால் உட்கட்சி மோதல்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை.பாதகமான விடயங்களாக, உள்ளூராட்சி சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பல கட்சிகள் ஆள் கணக்குக்கு பெண்களை களமிறக்கியுள்ளனர்.
இதனால் சபையில் ஆற்றல் குறைந்த உறுப்பினர்கள் அங்கம் வகிக்க ஏதுவாக அமைகின்றது. எமது பிரதேசங்களில் பெண்களில் பலர் அரசியலுக்கு வர பின்னடிக்கினர்னர். எதிர்வரும் காலத்தில் பெண்கள் ஆர்வம் கட்டினால் ஓரளவு திருப்தியாக அமையும். மேலும் இந்த வட்டார முறை காரணமாக அநேகமான சபைகளில் அறுதிப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் நிரூபிக்க முடியாது தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்தத் தேர்தல் முறையே காரணமாகும் – என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்ததாவது, புதிய தேர்தல் முறைமையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. இது தொடர்பில் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் ஆராய்ந்தோம். இதற்கான திருத்தங்களைச் செய்ய வேண்டும் – என்றார்.
மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்ததாவது, புதிய தேர்தல் முறைமையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் – என்றார்.
ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க தெரிவித்ததாவது–
புதிய தேர்தல் முறைமையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லையேல் பழைய தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் அடுத்த மாகாண சபை தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்று மேல் மாகாண சபையில் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளோம் – என்றார்.