மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலின் 65வது பிறந்த நாள் விழாவை மூன்று நாட்களுக்கு மிகச் சிறப்பாக கொண்டாட நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம் முடிவெடுத்தது. அதன்படி நடிகர் கமல் பிறந்தநாளான நவ., 7ல் அவர் பிறந்த ஊரான பரமக்குடியில் இருக்கும் அவரது இல்லத்தில், அவருடைய அப்பா மறைந்த சீனிவாசனின் உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.
அடுத்த நாள் 8ம் தேதி, சென்னை ஆழ்வார் பேட்டையில் இருக்கும் அவரது நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்துக்கு புதிய அலுவலகத்தை திறந்து வைத்த நடிகர் கமல், அதே அலுவலகத்தில், தன்னுடைய திரையுலக ஆசான் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினி, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு உள்ளிட்டோரை அழைத்திருந்தார்.
அடுத்ததாக, 9ம் தேதி, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நடிகர் கமல் பிறந்தநாளுக்கான பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றை இளையராஜா தலைமையில் நடத்த திட்டமிட்டனர். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்க, வானிலை மையம் அன்றைய தினத்தில் மழை கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை செய்ய, நிகழ்ச்சியை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். நேரு உள் விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சியை நடத்துவது என முடிவெடுத்தனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக, தமிழ் சினிமாவின் அனைத்து நடிகர் – நடிகையரையும் அழைக்க முடிவெடுத்து, இதற்காகவே சிறப்பாக தயார் செய்யப்பட்டிருக்கும் பிரம்மாண்ட அழைப்பிதழை, நிகழ்ச்சியை டி.வி.,யில் ஒளிபரப்ப இருக்கும் விஜய் டி.வி., நிறுவனத்தைச் சேர்ந்த மகேந்திரன், ஒவ்வொருவருக்காக கொடுத்து வருகிறார். அவர், பிரம்மாண்ட அழைப்பிதழை எடுத்துக் கொண்டு போய், நடிகர் ரஜினிக்கு கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, விஷால், ஆர்யா என முன்னணி தமிழ் நடிகர்கள் அவ்வளவு பேரும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.