‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு சண்டைக் காட்சிகளை அமைத்த சண்டை பயிற்சி இயக்குநர் பீற்றர் ஹெய்ன் பெயரிடப்படாத திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகியிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் மா.வெற்றி இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் இந்திய அளவில் புகழ்பெற்ற சண்டை பயிற்சி இயக்குநரான பீற்றர் ஹெய்ன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை ட்ரண்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம். டி. சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜே. எம். பஷீர் மற்றும் ஏ. எம். சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த திரைப்படம் பான் இந்திய அளவில் உருவாகும் முழு நீள எக்சன் திரைப்படம் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக பீட்டர் ஹெய்ன் பேசுகையில், ” இயக்குநர் வெற்றி எம்மை சந்தித்து கதையின் கருவை கூறினார். அவரிடம் இந்த கதைக்கு யார் கதையின் நாயகன்? என கேட்டேன். அதற்கு நீங்கள் தான் என்றார்.
அதற்கான காரணத்தையும் கேட்டேன். அதற்கும் அவர் விளக்கம் அளித்தார். அது எம்மை கவர்ந்ததால் இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இந்தப் படத்தில் நான் அடர்ந்த வனத்தில் வாழும் காட்டுவாசியாக நடிக்கிறேன். தயாரிப்பாளர்கள், இயக்குநர் ஆகியோர் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
‘சண்டை பயிற்சி இயக்குநரே எக்சன் ஹீரோவாக அறிமுகமாவது வரவேற்பிற்குரியது தான்’ என திரையுலகினர், பீற்றர் ஹெயினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.