கட்சி உறுப்புரிமை இல்லாமலாக்கப்படுவது தொடர்பாக அக்கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்க வேண்டும். இவ்விடயத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழு அவசியமில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர், அமைச்சு பொறுப்புக்களை வகிப்பதால் அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் பதவியை வகிக்க முடியாதென ஐ.தே.க மற்றும் த.தே.கூ உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், 2002-2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சி செய்த காலத்தில் அவர் அமைச்சு பொறுப்புக்களை வகித்திருந்தபோது எதிர்கட்சி தலைவராக மஹிந்த செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில், மஹிந்த அங்கத்துவத்தை பெற்றுள்ளமையால் அவரது நாடாளுமன்ற உரிமை பறிபோகும் நிலைமை உள்ளது.
ஆகையால் எந்த கட்சி உறுப்பினராக இருந்தாலும் அவரது உறுப்புரிமையை நீக்குவது தொடர்பில் அக்கட்சி செயற்குழுவே தீர்மானிக்க வேண்டும். இதனால் மஹிந்த விடயத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழு அவசியமில்லை” என சுசில் பிரேம ஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.