ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ராஜபக்ஷ குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கட்சியைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தயங்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்க தற்போது பிரித்தானியாவில் உள்ளார்.
நாடு திரும்பியதும் கட்சியை காப்பாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதற்காக பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலர் தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையையும் ராஜபக்ஷ குடும்பத்தினர் உரிமையாக்கிக்கொள்ளலாம் என்ற சந்தேகமுள்ளது.
இந்தநிலையில் கட்சியைப் பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு, சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை கோத்தபாயவுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சந்திரிக்கா தலைமையிலான குழுவினர் விரைவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடு கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட பெரும் தோல்வியாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.