சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியுடன் இன்று முதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளிகள் பலர் இணையவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதற்கு வருகின்றவர்கள் புதிதாக தாம் ஆதரவு வழங்கப் போகின்றவர்கள் போன்று காட்டிக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த அரசாங்க காலத்தில் விஜேதாச ராஜபக்ஸ அரசாங்கத்துடன் இருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஸவுடனே இணைந்து செயற்பட்டார். அந்த தரப்பினருடன் திருமணம் சாப்பிட்டு விட்டு பிள்ளைகளையும் பெற்று எடுத்ததன் பின்னர், தான் மீண்டும் திருமணம் முடிக்கப் போவதாக மேடையில் வந்து கூறுவது போன்று அவரது இணைவு காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் எம்முடனா? இருந்தார். மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து அவருடன் செயற்பட்டவர். இப்போது, புதிதாக ஆதரவு வழங்கப் போவதாக ஊடக கண்காட்சி காட்ட முற்படுகின்றார்.
ஆனால், நாம் இதுபோன்று அல்ல, உண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளவுள்ளோம். இதன்போது, இந்நாட்டு மக்களுக்கு யார் சரியான பாதையில் உள்ளவர்கள், யார் தவறான பாதையில் உள்ளவர்கள் என்பது தெளிவாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.