சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் அதிக பந்துகள் விளையாடி ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக இந்திய- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி அமைந்தது.
இதற்கு முன்னர், நியூஸிலாந்து- பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் 2021 ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் 238 பந்துகள் விளையாடி ஒரு சிக்கஸர்கூட விட்டுக்கொடுக்கப்பாடாதமையே முன்னைய பதிவாக இருந்தது.
இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற (29) போட்டியில் இந்திய மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரண்டு அணிகளு மே ஒரு சிக்ஸரைக் கூட அடிக்காதமை கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றது. இதில் நியூஸிலாந்து 6 பவுண்டரிகளை மாத்திரமே அடித்திருந்தது.
99 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா இலகுவாக எடுத்து வெற்றியீட்டும் என பலரும் எண்ணியிருந்தபோதிலும், வெற்றி இலக்கை 19.5 ஓவர்களிலேயே எட்டியிருந்தது. இதன்படி இந்தியா 4 விக்கெட்டுக்களை இழந்து 101 பெற்று 6 விக்கெட்டுக்களால் இத்தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்து ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் சமப்படுத்தியுள்ளது. இந்தியா சார்பில் 8 பவுண்டரிகள் அடிக்கப்பட்டபோதிலும், ஒரு சிக்ஸர்கூட விளாசப்படவில்லை.
இப்போட்டியில் ஆடுகளத்தன்மையானது, பந்துவீச்சுக்கு சாதமாக இருந்தது. குறிப்பாக சுழற் பந்துவீச்சுக்கு அதிக சாதக தன்மை வாய்ந்ததாக இருந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். இப்போட்டியில் மொத்தமாக வீசப்பட்ட 39.5 ஓவர்களில் 30 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் வீசியிருந்தமை கவனிக்கத்தக்க அம்சமாகும்.