சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணை உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண ஐசிசி மகளிர் சவால் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி ருவாண்டாவின் கிகாலியில் சனிக்கிழமை (18) ஆரம்பமாகிறது.
சனிக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் வரவேற்பு நாடானா ருவாண்டாவும் இத்தாலியும் விளையாடவுள்ளன. இரண்டாவது போட்டியில் நேபாளத்தை அமெரிக்கா எதிர்த்தாடவுள்ளது.
இந்த சுற்றுப் போட்டியில் ஐந்தாவது அணியாக வனாட்டு பங்குபற்றுகின்றது.
சனிக்கிழமை ஆரம்பமாகும் அங்குரார்ப்பண ஐசிசி மகளிர் சவால் கிண்ண கிரிக்கெட் போட்டி மே மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவடையும்
ஐசிசியினால் கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்டுத்தப்பட்ட வளர்ந்துவரும் நாடுகள் கிண்ண கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து இணை அங்கத்துவ நாடுகளில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் ஐசிசி மகளிர் சவால் கிண்ண கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வளர்ந்துவரும் நாடுகள் கிண்ண கிரிக்கெட்டில் பங்கேற்காத ஐசிசியின் ஐந்து பிராந்தியங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற அணிகள் ஐசிசி மகளிர் சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுகின்றன.
2025இல் நடைபெற்ற பிராந்திய ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் அந்தந்த பிராந்தியங்களில் பெற்ற இடங்களின் அடிப்படையில் இந்த ஐந்து அணிகளும் தெரிவாகியுள்ளன.
இந்த ஐந்து அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடுவதன் மூலம் அதிக போட்டி வாய்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்த அணிகள் எதிர்காலங்களில் பலம்வாய்ந்த எதிரணிகளை சந்திப்பதற்கு தயாராகக் கூடியதாக இருக்கும்.
இது, மகளிர் கிரிக்கெட் விளையாட்டைத் தொடர்ந்து வளர்க்கும் நோக்கில், அதன் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற ஐசிசியின் உறுதிப்பாட்டிற்கு இணங்க அமைந்துள்ளது.
முதன்முறையாக 12 அணிகள் பங்கேற்கும் ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம், இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ளது. ஐசிசி 2024இல் அறிவித்ததற்கு அமைய 2030ஆம் ஆண்டு மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 16 ஆக விரிவுபடுத்தப்படவுள்ளது.

