தமிழ் சினிமாவில் தங்களது நண்பன் செல்வகண்ணன் இயக்குனர் ஆக வேண்டும் என்பதற்காக 50 நண்பர்கள் சேர்ந்து பணம் முதலீடு செய்து தயாரித்த ‘நெடுநல்வாடை’ படம் இன்று(மார்ச் 15) திரைக்கு வந்துள்ளது.
பல போராட்டங்களைச் சந்தித்த இந்தப் படம் பத்திரிகையாளர்களின் பாராட்டையும், திரையுலகத்தினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இப்படத்தில் முதலில் கதாநாயகியாக அதிதி மேனன், தான் நடித்தார். ஆனால், படப்பிடிப்பு நடந்த சில நாட்களில் இயக்குனர் மீதே பொய்ப் புகார் கூறி, படத்தில் நடிக்க மறுத்து போய்விட்டார்.
அதன் பின்னர் நடிக்க வந்தவர்தான் மலையாள நடிகை அஞ்சலி நாயர். இப்போது படத்தைப் பார்த்த பலரும் அஞ்சலியின் நடிப்பைப் பாராட்டித் தள்ளுகிறார்கள். கிராமத்துப் பெண் அமுதா கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்துள்ளார் என்று அவருக்குப் பாராட்டுக்கள் குவிகிறது.
ஆனால், அஞ்சலி நாயர் தற்போது ஏர்-ஹோஸ்டஸ் ஆக பணி புரிந்து வருகிறார். இந்தப் படத்தின் பிரமோஷனுக்குக் கூட வர முடியாமல் அவர் பறந்து கொண்டிருக்கிறாராம். சீக்கிரமே அவர் அந்த வேலையை விட்டு வரும் அளவிற்கு பட வாய்ப்புகள் வரும். தமிழ் சினிமாவில் அவருக்கு சிறப்பான இடம் காத்திருக்கிறது என்று கோலிவுட்டில் பேசி வருகிறார்கள்.