எழுக தமிழ் பேரணி குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.
எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மூன்றாவது எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள குறித்த பேரணிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோ எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
நேற்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக ரெலோ அமைப்பு இவ்வாறு ஆதரவு வெளியிட்டுள்ளது.
இந்தநிலையிலேயே இதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு தமிழர் தாயகப்பகுதிகளில் முழு கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் வவுனியா மக்களிற்கு துரோகம் செய்தவரின் இணைத்தலைமையில் நடைபெறும் பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என வவுனியா வர்த்தகர் நலன்புரிசங்கம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.