எம்மை அடக்கவும் முடியாது எம்மை தாண்டி எதுவும் நடக்காது – ஜனாதிபதிக்கே சவால்..!!
புதிய அரசியல் யாப்பு எந்தவகையிலும் நிறைவேற்றப்படாது, அதற்கு நாம் இடம் கொடுக்கப்போவதும் இல்லை யாரும் பயப்பட வேண்டாம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
3ஆம் திகதி மட்டக்களப்பிற்கு அனைவரும் ஒன்று திரள வேண்டும் என இன்று அவர் அழைப்பு விடுத்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளி மூலமாகவே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
தற்போது நாட்டில் உள்ள நிலைப்பாடுகள் தொடர்பில் சரியாக தெரிந்து கொள்ளாமல் பல்வேருவகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சிலர் நாம் அடங்கி விட்டதாகவும் தெரிவிக்கின்றார்கள் இவற்றில் உண்மைத்தன்மை எதுவும் இல்லை.
புதிய அரசியல் யாப்பு எக்காலத்திலும் நிறைவேற்றப்படாது அந்த விடயம் தொடர்பில் எவரும் கவலைப்படவோ அல்லது கலவரப்படவோ தேவையில்லை.
அந்த அரசியல் யாப்பு கொண்டு வரப்படுவது இப்போதைய அரசு செய்து வருகின்ற சூழ்ச்சிகளை மறைப்பதற்காகவே எம்மைத் தாண்டி அது ஒரு வகையிலும் நிறைவேற்றப்படாது இது நிச்சயம்.
இந்த நாட்டில் இருக்கும் தலைவர்கள் முறையாக இல்லை. அதேபோன்று தலைவர்களுக்கும் பஞ்சம் இல்லை புதுப்புது குழுக்களும் தலைவர்களும் கிளைவிட்டு கொண்டே இருக்கின்றார்கள்.
முறையான தலைவர் இல்லாவிட்டால் நாடு அழிந்து போகும். ஒன்றை மட்டும் கூறிக்கொள்கின்றேன் உங்களது பைத்தியக்காரத்தனமான விளையாட்டுகளை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இளைஞர்கள் அனைவரும் புத்தியோடும், அமைதியோடும் முறையான ஒரு தலைவனுக்கு கீழ் ஒன்றுபடுங்கள். அப்படியும் முடியாவிட்டால் சிங்களவர்கள் என்ற வகையிலாவது ஒன்று படுங்கள் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் மேற்கொண்ட பேச்சு வார்த்தையின் பின்னர் நாம் அமைச்சரின் பேச்சை நம்பி பொறுமையாக இருக்கின்றோம் என ஞானசார தேரர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் மீண்டும் அவர் எச்சரிக்கை விடும் பாணியில் குறிப்பாக நாட்டின் ஜனாதிபதிக்கே சவால் விடும் விதமாக பகிரங்கமாக கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் பல தரப்பினரரும் பொதுபல சேனா உட்பட இனவாதம் பரப்புகின்ற யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஜனாதிபதியும் கூட அவ்வாறானதொரு கோரிக்கையினை முன்வைத்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது. இந்த சந்தர்ப்பத்திலேயே திடீர் பேச்சுவார்த்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அதனை அடுத்து சாதகமான முடிவு பெறப்பட்டு விட்டதாகவே தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது மீண்டும் அதற்கு முற்றும் முரண்பட்ட வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
எப்படியாயினும் தேரரின் இவ்வாறாக செயற்பாடுகளின் பின்னணியில் அரசியல் ஆதரவு அதிகமாக இருக்கின்றது என்றே தென்னிலங்கை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.