கடல்மார்க்கமாக மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்களை கையாள்வதில் வலிமை மிக்க பங்காளியாக இலங்கை திகழ்வதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கப்பல் என்ஜின்களை கையளிக்கும் நிகழ்வு காலியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹட்சசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கை கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பியால் டி சில்வா ஆகியோர் தமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, ஆட்கடத்தல், நாடுகடந்த குற்றச்செயல்கள் மற்றும் கடல் மற்றும் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஆகிய நடவடிக்கைகள் தொடர்பான அவுஸ்ரேலியா மற்றும் இலங்கை இடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகாலத் தொடர்பை இருவரும் பாராட்டினர்.
மேலும் இலங்கை கடற்படைக்கான அன்பளிப்பானது கடற்படை அச்சுறுத்தல்கள் தொடர்பாக இலங்கையில் ஒத்துழைப்புடன் வேலை செய்வதற்கான அவுஸ்ரேலியாவின் உறுதிபாட்டை உறுதிசெய்வதற்கான சிறந்த உதாரணமாகும் எனவும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.