வவுனியா மாவட்டச் செயலகத்தின் முன்பாக, பௌத்த விஹாரை அமைப்பதற்கென நாளை இடம்பெறவிருந்த அடிக்கல் நாட்டும் வைபவம் வட. மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் தலையீட்டினையடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பௌத்த கட்டடக்கலையை பிரதிபலிக்கும் வண்ணம் முப்படையினரின் அனுசரணையுடன் பண்டாரவன்னியனின் சிலைக்கு பின்புறமாக குறித்த விஹாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இவ்விடயம் குறித்து வட. மாகாண சபை உறுப்பினரிடம் தொடர்பு கொண்ட போது அவர், “மாவட்ட செயலகத்தில் வழிபாட்டுத் தலம் அமைப்பது தொடர்பாக கிடைத்த தகவலுக்கு அமைவாக அதனை நிறுத்துமாறு அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தேன். அதற்குப் பின்னரும் இவ்வேலைத்திட்டம் தொடர்ந்தமையால் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியிருந்தேன்.
அரசாங்க அதிபர், மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களின் விருப்பத்திற்கு அமைய சர்வ மதங்களையும் உள்ளடக்கிய வழிபாட்டுத் தலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும் தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பிரதேசத்தில் இவ்வாறான வழிபாட்டுத் தலம் அமைப்பதை உடன் நிறுத்தி பிரதேசத்தின் ஒற்றுமைக்கு வழியமைக்குமாறு கேட்டிருந்தேன்.
இதன் அடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தினை நிறுத்துவதாக அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
இவ்விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.