உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான்தான் என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் தெரிவித்துள்ளார். இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல், ஊடுருவல் ஆகிய முயற்சிகளால் எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
குறிப்பாக, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை நீக்குவதாக மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது.
அத்துடன் அந்த மாநிலமானது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சிறந்த அமெரிக்க கடற்படை தளபதியாகவும், அமெரிக்க மத்திய ஆணைய தலைவராகவும் பின்னர் பாதுகாப்பு செயலாளராகவும் இருந்த மாட்டிஸ், பாகிஸ்தான் மற்றும் தெற்காசியாவுடன் நீண்டகால அனுபவம் பெற்றவர்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் இருந்தவரும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளராக இருந்து பல்வேறு விவகாரங்களை அணுகி பழுத்த அனுபவம் பெற்றவருமான ஜேம்ஸ் மார்ட்டிஸ், “கால் சைன் கேயாஸ்” எனும் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், தான் பதவியில் இருந்தபோது பெற்ற பல்வேறு அனுபவங்கள் மற்றும் சம்பவங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்துள்ள அவர், பாகிஸ்தானின் செயல்பாடுகளை மிக கடுமையாக சாடியுள்ளார்.தான் கையாண்ட நாடுகளிலேயே மிகவும் ஆபத்தான நாடு என்றால் அது பாகிஸ்தான் தான் என கூறியுள்ள அவர், அணு ஆயுதங்களை கையகப்படுத்துவதில் பாகிஸ்தான் வேகமாக வளர்ந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை பயங்கரவாதிகளின் கையில் கொடுத்தால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ள ஜேம்ஸ் மாட்டிஸ், பாகிஸ்தான் நாட்டின் எதிர்காலம் குறித்து அக்கறைப்படக்கூடிய அளவிற்கான தலைவர்கள் அந்த நாட்டில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.