உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற முறையில் எமக்கும் மிகவும் பெருமை சேர்க்கின்ற விடயமாக இது அமைகின்றது.
முன்னதாக உலகின் தலைசிறந்த ஐம்பது ஆசிரியர்கள் என்ற நிலையினை எட்டிய இவர், தற்பொழுது பத்து ஆசிரியர்களுள் ஒருவராக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியானது அஸ்திரேலியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவதாக அந்த நாட்டு தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்கள் பலவும் இந்த ஈழத்தமிழச்சியினை வெகுவாக பாராடுகின்றது. உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் முதலாவதாக ஐம்பது இடங்களுக்குள்ளும், தற்பொழுது பத்து இடங்களுக்குள்ளும் யசோதை முன்னேறியமை அளப்பெரும் சாதனை என அந்த ஊடகங்கள் புகழ் மாலை பொழிகின்றது.
பத்து இறுதி தேர்வாளர்களில் முதலாவது நிலையினை பெறும் போது ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை இவர் பரிசாக பெறுவதற்கு வாய்ப்புண்டு, எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் நாளன்று இந்த சாதனைக்கான பரிசுத்தொகை முதலாம் இடத்தினை பெறுபவருக்கு டுபாயில் வைத்து வழங்கப்படும். இந்த வாய்ப்பும் இவருக்கே பெரும்பாலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யசோதை அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ரூட்டி ஹில் உயர்நிலைக் கல்லூரியில் ( Rooty Hill High School) வரலாறு, சமூகமும் கலாச்சாரமும், புவியியல் பாடங்களை கற்பிக்கும் ஓர் ஆசிரியர். இக் கல்லூரியில் கல்விகற்கும் 80வீதமான மாணவர்கள் அகதிகளாகவும், புலம்பெயர்வாளர்களாகவுமே உள்ளனர், அகதிகள், புலம்பெயர்வாளர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் சமத்துவமான கல்விக்காக அவர் தினமும் அங்கு போராடுவதுடன் கல்வி தொடர்பாக தனது தனிப்பட்ட செயற்திட்டங்களை போதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆஸ்திரேலிய பழங்குடியினர் கல்வியின் மீது மிகவும் நாட்டம் குறைந்தவர்கள், மிகவும் பின்னிலையிலுள்ள ஓர் சமூகம் இவருடைய. கல்லூரியில் 65 பழங்குடி மாணவர்கள் கல்வியை விரும்பிக் கற்பதற்கு யசோதை காரணமாக இருந்ததுடன் அங்குள்ள பழங்குடி இன மக்களிடையே கல்வி குறித்த தேவையினை உணரவைத்து பல்கலைக்கழகம் செல்லவேண்டும் என்ற ஆசையினை ஊட்டியதாக அவர்மீது அவுஸ்திரேலிய ஊடகங்கள் புகழ்மாலை சூட்டியுள்ளன.
179 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகலிலிருந்தே இந்த பத்து பேரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 2010 ல் உருவாக்கப்படட இலண்டனை தலைமையக்கமாகக் கொண்ட ” The Varkey Foundation ” எனும் அமைப்பே இந்த நிகழ்வினை வருடா வருடம் நடாத்திவருகின்றது.
எதிர்வரும் மார்ச் 24 ம் திகதியில் அறிவிக்கப்படும் முதல் பரிசினையும் இவரே பெற்று தன் குடும்பத்திற்கும், தமிழ் சமூகத்திற்கும், ஆஸ்திரேலிய நாட்டிற்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென நாமும் வாழ்த்துவோம்