துடுப்பாட்ட வீரரும், ஆர்வலருமான ஆதித்யா ரவி உருவாக்கிய ’22 யார்ட்ஸ்’ எனும் அமைப்பு, இளம் துடுப்பாட்ட வீரர்களின் திறமையைக் கண்டறிந்து மேம்படுத்தும் வகையிலும், லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்கும், ஏப்ரல் 14, 15, 16 ஆகிய மூன்று திகதிகளில் சிறப்பு பயிற்சி முகாமை சென்னையில் நடத்துகிறது.
இதனை இந்தியாவின் அஷ்வின் ஒருங்கிணைக்கிறார்.
இது தொடர்பாக 22 யார்ட்ஸ் அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…
”தமிழகம் மற்றும் சர்வதேச நாடுகளில் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை அங்கீகரிக்கும் வகையிலும், திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் தளமாகவும் 22 யார்ட்ஸ் அமைந்திருக்கிறது.
இந்த அமைப்பிற்கு சொந்தமாக ஐந்துக்கும் மேற்பட்ட துடுப்பாட்ட மைதானங்கள் உள்ளன.
இதில் இரண்டு மைதானங்கள் பிளட் லைட் எனப்படும் மின்னொளியில் விளையாடுவதற்கு ஏற்ற மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னையில் புகழ்பெற்ற எம் ஏ சிதம்பரம் மைதானத்திற்கு அருகே தனித்துவமான வசதிகளுடன் அமைந்திருக்கிறது.
இந்த அமைப்பில் பதிவு செய்யும் அனைத்து வீரர்களின் தகவல்களை துல்லியமாக கையாள பிரத்தியேக செயலி ஒன்றையும் உருவாக்கியுள்ளது.
இது அவர்களின் திறமைகளை கண்டறிந்து சரியான வாய்ப்புகளை வழங்கவும் வழிவகுக்கிறது.
இந்தியாவின் ஆல் கவுண்டர் அஷ்வின் கடந்த நான்கு ஐந்து வருடங்களாக எங்களின் முன்னேற்றத்தை அவதானித்து, தொடர்ந்து ஆலோசனை அளித்து வருகிறார்.
அவருடைய பணி நெருக்கடியிலும் நேரம் ஒதுக்கி வீரர்களுக்கு பயிற்சியும், ஆலோசனையும் அளித்து வருகிறார்.
ப்ரீத்தி அஸ்வினின் திறமையான தலைமையில் ’22 யார்ட்ஸ் ஜென் நெக்ஸ்ட்’ மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அஷ்வினின் ஆதரவுடன் பிரிமியர் லீக்குகளிலும் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுகிறது.
பான் இந்திய அளவில் விரிவுபடுத்தும் வகையில், இந்திய வம்சாவளி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களும் 22 யார்ட்ஸில் முதலீடு செய்துள்ளனர்.
எங்களுடைய கோடைகால பயிற்சி முகாம் ஏப்ரல் 14, 15, 16 ஆகிய திகதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
இதில் பங்கு பற்றி இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தலாம். மேம்படுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.