இலங்கையில் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜப்பான் அரசாங்கத்தினால் 15 பில்லியன் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் மருத்துவ சேவை மேம்பாட்டு திட்டத்திற்கான கடன் சான்றிதழ் பத்திரத்தில் இரு நாடுகளதும் உயர்ஸ்தானிகர்கள் நேற்று கையெழுத்திட்டுள்ளனர்.
குறித்த உடன்படிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் மூலம், மூன்றாம் நிலை சுகாதார நிலையங்களின் மருத்துவ வசதிகள் மற்றும் உபகரணங்களை மேம்படுத்தல், மருத்துவ ஊழியர்களுக்கான பயிற்சி மையங்களை நிறுவுதல் மற்றும் இலங்கையின் மேற்கு, வடமேற்கு, மத்திய, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களின் மருத்துவ உபகரணங்களின் பராமரிப்பை வலுப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கப்படவுள்ளது.
தொற்றா நோய்கள் குறிப்பாக இருதய நோய்கள் பற்றிய நோயை அடையாளம் காணல் மற்றும் சிகிச்சைகளுடன் தொடர்புடைய மருத்துவ சேவைகளை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
0.1 வீதம் என்ற மிகக் குறைந்த வருடாந்த வட்டி வீதத்தில் இக்கடன் வழங்கப்பட்டுள்ளதுடன், பன்னிரெண்டு ஆண்டு கருணை காலத்திற்கு பின்னர் 40 ஆண்டுகளுக்குள் இக்கடனை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.