நாட்டில் தற்போதைய நிலைமையில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் போது இரவு நேரக் கூட்டங்களை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளனர். தேர்தல் நடவடிக்கைகளை இவர்கள் உன்னிப்பாக அவதானித்து வருவதால் சட்ட விதிகளை ஒழுங்காக பேணுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கட்சிகளின் செயலாளர்கள் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் நேற்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
தேர்தல் ஜனநாயக முறையில் நடப்பதற்கு சகல தரப்புகளும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் தேர்தல் விதிகளுக்கு அமையவே இருக்கவேண்டும். ஒழுங்குவிதிகள் மீறப்படுமானால் கடுமையான சட்டவிதிகள் எடுக்கப்படவேண்டி ஏற்படலாம். சட்டம் ஒழுங்கு முறையாக பேணப்படவில்லையென்று முறைப்பாடுகள் வருமானால் வேட்பாளர்கள் சட்டச்சிக்கலை எதிர்கொள்ள நேரிடலாமென்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.