தாயகத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த சீரற்ற காலநிலை இயப்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது நீர் வழிந்தோடி வருவதாக நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதை அடுத்து, அதன் வான் கதவுகள் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை வட மாகாணத்தில் நிலவி வந்த மழையுடன் கூடிய காலநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று முதல் படிப்படியாக மழையுடன் கூடிய காலநிலை குறைவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 54,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 11,299 பேர் இடம்பெயர்ந்து 38 முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து. வடமாகாண அதிகாரிகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

