இந்தியாவையும், பாகிஸ்தானையும் அணுஆயுத நாடுகளாக ஒரு போதும் தங்களால் அங்கீகரிக்க முடியாது என சீனா தெரிவித்துள்ளது.
பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லு காங்கிடம், வியட்நாமில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே நடந்த 2 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவரிடம், 2 அணு உலைகளை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வடகொரியா மறுத்ததால் டிரம்ப் – கிம் ஜோங் உன் இடையே நடந்த 2 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் வடகொரியாவை, இந்தியா மற்றும் பாக்., போன்று அணுஆயுத நாடாக சீனா அங்கீகரிக்குமா என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், இந்தியாவையும், பாக்.,ஐயும் அணுஆயுத நாடுகளாக சீனா ஒருபோதும் அங்கீகரிக்காது. இதில் எங்களின் நிலைப்பாடு எப்போதும் மாறாது என்றார். 48 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அணுசக்தி விநியோக நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைவதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தது. அதே சமயம் இந்தியாவுக்கு பிறகு விண்ணப்பித்த பாக்., அணுசக்தி விநியோக நாடுகளின் பட்டியலில் இணைய சீனா ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.