இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க உதவுமாறு அவர்களது உறவுகள் நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மன்றாடியுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்தச் சந்திப்பில் அவர்கள் கூறியவை வருமாறு-
எழுவைதீவு, பருத்தித்துறை, மயிலிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 மீனவர்களை, கடந்த மூன்றாம் திகதி இந்தியக் கடற்படையினர் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்தது.
கடந்த மூன்றாம் திகதி மீன் பிடிப்பதற்காக தொழிலுக்குச் சென்ற எமது குடும்ப உறுப்பினர்கள் நீண்ட நேரம் ஆகியும் கரைக்குத் திரும்பாத நிலையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தவித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது அவர்களுடன் அருகில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிற மீனவர்கள் எமது குடும்ப உறுப்பினர்களை கப்பல் ஒன்றில் வந்தவர்கள் கூட்டிச் சென்றுள்ளனர் என எம்மிடம் கூறினர். இதனைக் கேட்ட நாம் என்ன செய்வது என்று தெரியாது திகைத்து நின்றோம். அப்போது எமது குடும்பத்தவர்கள் தங்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர் எனவும், தங்களின் படகுகளை இந்தியாவுக்கு இழுத்துச் செல்கின்றனர் எனவும் பதற்றத்துடன் கூறினர்.
அதன் பின்னர் இன்று வரை எம்முடன் அவர்கள் தொடர்புகொள்ளவில்லை. இந்தியாவில் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் எமக்குத் தெரியாதுள்ளது. எங்கள் குடும்பத்திலுள்ள கணவன், பிள்ளைகள் போன்றவர்களுக்கு என்ன நடந்தது என தெரியாது திக்குமுக்காடி வருகின்றோம். இவ்வாறான நிலையில் கடற்றொழிலுக்குச் சென்ற எமது குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடித்து, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர்களையும் படகுகளையும் விடுவிக்க உதவுமாறு யாழ்ப்பாணத்திலுள்ள மாவட்ட நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளரிடமும் இந்தியத் துணைத்தூதரிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அன்றாடம் கடலில் தொழில் செய்யும் சீவியம் நடத்தி வரும் எமக்கு எங்களின் குடும்ப உறவுகளை விடுவித்துத் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் ” என்றனர்.