காலஞ் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவினால் இடைவெளியாகியுள்ள குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் இடைவெளியை நிரப்புவதற்கு தேவையான சட்ட ஆலோசனையை பெற்றுத் தருமாறு குருணாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் அடுத்துள்ளவர் சாந்த பண்டார ஆவார். இவர் தேசியப்பட்டியலின் ஊடாக ஏற்கனவே பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வந்தார். சாலிந்த எம்.பி.யின் மரணத்தையடுத்து மக்கள் வாக்கில் தெரிவானவர்கள் பட்டியலில் தனது பெயர் அடுத்து இருப்பதனால், தேசியப் பட்டியல் தெரிவை இராஜினாமா செய்திருந்தார்.
சாலிந்த திஸாநாயக்க மரணிக்கும் போது சாந்த பண்டார பாராளுமன்றத்தில் இருந்ததனால், அந்தப் பதவி வெற்றிடம் தனக்கே கிடைக்க வேண்டும் என விருப்பு வாக்குப் பட்டிலில் 12 ஆவது இடத்திலுள்ள முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஆர்.எம்.டீ.பீ. ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தனக்கு புதிய அனுபவம் என்ற வகையில் இது குறித்து தீர்மானம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு தெரிவித்தே மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியுள்ளதாகவும் தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் ரசிக பீரிஸ் அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கலாநிதி எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட இடத்துக்கே, சாந்த பண்டார நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.