அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் பொருட்டு இந்த மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தனது சர்வதேச கிரிக்கெட்டை விராத் கோஹ்லி ஆரம்பிப்பர் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 9 தினங்களே எஞ்சியுள்ள நிலையில் விராத் கோஹ்லி இந்தத் தொடரில் விளையாட மாட்டார் என இன்று அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் போட்டியின்போது அவரது தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை எப்போது பூரண குணமாகும் என்பது தெரியாத நிலையில் அவர் ஆப்கானிஸ்தானுடனான தொடரைத் தவறவிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வெற்றிகொண்டு றோயல் செலஞ்சர்ஸ் சம்பியனான பின்னர் ஐரோப்பாவில் விராத் கோஹ்லி விடுமுறையைக் கழிப்பதாக நம்பகரமான வட்டாரங்கள் மூலம் தெரியவருவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஐபில் இறுதிப் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 75 ஓட்டங்களைப் பெற்று ஆட்டநாயகனான விராத் கோஹ்லி, அந்தத் தொடரில் 16 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், 5 அரைச் சதங்கள் உட்பட 675 ஓட்டங்களை மொத்தமாக குவித்தார்.
இதேவேளை, முன்னாள் தலைவர் ரோஹித் ஷர்மாவின் நிலை குறித்து தொடர்ந்தும் சந்தேகம் நிலவுகிறது.
ரோஹித் ஷர்மா தனது உடற்தகுதி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மத்திய திறன் நிலையத்திற்கு இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்.
ரோஹித் ஷர்மாவும் ஹார்திக் பாண்டியாவும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் குழாத்திற்கு தெரிவான போதிலும் இருவரும் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தனர்.
சகலதுறை வீரர் ஹார்திக் பாண்டியா தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளபோதிலும் ரோஹித் ஷர்மா தனது நிலை குறித்து இன்னும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அறிவிக்கவில்லை.
இது இவ்வாறிருக்க, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விராத் கோஹ்லிக்குப் பதிலாக ருத்துராஜ் கய்க்வாடுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.












