நான் அரசியலுக்கு வருகின்றபோது – 2010 ஆம் ஆண்டு – எனது சொத்து விவரத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தேன். . பின்னர், 2019 ஆம் ஆண்டு – தற்போது – எனது சொத்து விவரங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருந்தேன். நான் அரசியலுக்குள் வரும்போது எனது சொத்து அதிகம். அரசியலுக்கு வந்ததன் பிற்பாடு எனது சொத்து குறைவடைந்தே உள்ளது. அதாவது, அரசியலுக்குள் வந்தமையால் எனக்கு நட்டமே ஏற்பட்டுள்ளது. இரண்டு தடவையும் என்னால் வழங்கப்பட்ட சொத்துவிவரத்தை இரண்டு நிரல்களில் ஒரே பார்வையில் தருவார்கள். அனைவரும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பார்த்து நீங்களே தீர்மானிக்கலாம்.
– இவ்வாறு மிகத் தெளிவாகவும் – ஆணித்தரமாகவும் – தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ‘காலைக்கதிர்’ நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
சொத்து விவரங்களை நாங்கள் முழுமையாகவே தான் வெளிப்படுத்தியிருக்கின்றோம். சிலர் வங்கிக் கணக்கு இலக்கத்தை அழித்துவிட்டு வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். வங்கிக் கணக்கு இலக்கம் இரகசியமானது. அதனை வெளிப்படுத்தவேண்டாம். அதனை மறைத்துவிட்டு வெளிப்படுத்துமாறு எனக்கும் அந்த ஆலோசனை சொல்லப்பட்டது. ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. அதனால் என்னுடைய வங்கிக் கணக்கு இலக்கம் எல்லாம் வெளிப்படையாக வந்திருக்கிறது. நாங்கள் சொத்து வெளிப்படுத்துதல் என்பதில் ஒவ்வொரு வருடமும் வெளிப்படுத்தும் சொத்து விவரங்களும் இருக்கும். அதிலும் முதலில் வெளிப்படுத்திய சொத்துவிவரமும் சேர்ந்து தான் வரும்.
அதற்கமைய நான் எனது சொத்து விவரத்தை கடந்த 2010 ஆம் ஆண்டு முதற்தடவை யாக வெளிப்படுத்தியிருக்கிறேன். இப்போது
2019 ஆம் ஆண்டு மீண்டும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு, 2019 ஆம் ஆண்டு என என சொத்து விவரங் கள் இரண்டு நிரல்களில் இருக்கும்.
அரசியலுக்கு வருகின்றபோது இருந்த சொத்து எவ்வளவு? இப்போது உள்ள சொத்து எவ்வளவு? என்பதை ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கும். அதைத் தான் நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம். எங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வரும்போது இருந்த சொத்தை விட இப்போது சொத்து குறைவாகத்தான் இருக்கிறது. அரசியலுக்கு வந்தது எங்களுக்கு நட்டம் என்பது அந்தச் சொத்து விவரக் கோவைகளைப் பார்க்கின்றவர்களுக்குத் தெரியும்.
தமது சொத்து விவரங்களை வெளிப்படுத் தாதவர்கள் தயவு செய்து அதனைப் பகிரங்கப்படுத்துங்கள். இதனுடைய நோக்கமே மக் களுக்குத் தெரியவேண்டுமென்பதுதான். அதை இந்த வருடம் ஜூன் 30ஆம் திகதி எங்கள் விவரக் கோவைகளை அனுப்பிய பிறகு நாடாளுமன்றத்தில் இந்த ஐந்து பேருடன் தற்போது இன்னொருவர் சேர்ந்துள்ளமையால் நாங்கள் ஆறு பேரும் திரும்ப அதனை வெளிப்படுத்துவோம். அந்த வேளையில் நீங்களும் வெளிப்படுத்துங்கள் என்று மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிரங்கமாக அழைப்பு விடுப்போம்.
எனது கணிப்பின்படி இருபது முதல் முப்பது பேராவது எங்களோடு சேர்வார்கள் என்று நினைக்கின்றேன். ஆனாலும் வெளிப் படுத்தாதவர்கள் குறித்து மக்கள்தான் தீர்மானங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவது ஏன் அவ்வாறு தமது சொத்து விவரங்களைப் பகிரங்கப்படுத்தப்பயப்படுகிறார்கள் என்று மக்கள் முடிவெடுக்கலாம். – என்றார்.