கண்டிக் கலவரத்தின் முதன்மைச் சூத்திரதாரி யென பொலிஸாரால் கூறப்படும் மகாசென் பலகாயவின் தலைவரான அமித் வீரசிங்கவின் அலுவலகத்திலிருந்து நேற்று 7 பெற்றோல் குண்டுகள், இனவெறுப் பைத் தூண்டக் கூடிய துண்டறிக்கைகள், வங்கிப் புத்தகங்கள் உள்ளிட்ட பெருமளவான சான்றுப் பொருள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குண்டசாலை – நத்தரம்பொத்தவில் உள்ள அவரது அலுவலகம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று முற்றுகையிடப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பொது மக்களிடையே பகிர்ந்தளிக்க தயார் நிலையில் இருந்த மிகக் கடுமையாக இனவாதத்தை தூண்டும் சொற்பிரயோகங்கள் அடங்கிய கையேடுகள், துண்டறிக்கைகள், பதாதைகளுக்கு மேலதிகமாக பல வங்கிப் புத்தகங்களும் சிக்கியுள்ளன. நிதி வைப்பிலிட்டமைக்கான பல பற்றுச் சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அலுவலகத்தில் இருந்து வாகன அனுமதிப்பத்திரங்கள், இனவாத சொற்பதங்கள் அடங்கிய விவரங்கள், ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த தயார் செய்யப்பட்டிருந்த இலச்சினையுடன் கூடிய ஒலிவாங்கி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.