பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன் விடுதலையில், தான் முக்கிய பங்கு வகித்ததாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, ‛புரூடா’ விடத் தொடங்கி இருக்கிறார்.
இப்போதைய பாக்., பிரதமரும் அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கானுடன், நமது அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து நண்பராக இருக்கிறார். இம்ரான் பிரதமராக பதவி ஏற்றபோது பாக்., சென்று வாழ்த்தினார். அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டிப்பிடித்தார்.இதற்கு இந்தியாவில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சமூகவலை தளங்களில் சித்துவை பலர் ‛காய்ச்சி’ எடுத்தனர். அப்போதும் அவர் தனது செயல்களுக்காக வருத்தப்படவில்லை. இதையடுத்து டிவியில் நடத்தி வந்த ஒரு ஷோவில் இருந்து சித்து நீக்கப்பட்டார். காங்., கட்சியில் இருப்பதால் அக்கட்சி தலைவர் ராகுலுக்கு நெருக்கமானவராகவும் தன்னைக் காட்டிக்கொள்கிறார்.இப்போது அபிநந்தனின் விடுதலையில் தனக்கு பங்கு இருப்பதாக கூறத் தொடங்கி இருக்கிறார். இதை காங்., கட்சியிலேயே முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தவிர வேறு யாரும் நம்பவில்லை.சாண்டி மட்டும் தனது டுவிட்டரில், ‛‛அபிநந்தன் விடுதலைக்காக சித்துவுக்கும் இம்ரானுக்கும் நன்றி” எனக் கூறி இருக்கிறார்.2004ல் பா.ஜ.,வில் எம்.பி.,யாக இருந்தவர் சித்து. 2017ல் பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன் காங்., கட்சியில் சேர்ந்தவர். பாக்., விஷயத்தில் காங்., கட்சிக்கு மாறாக சொந்தமாக ஒரு நிலைப்பாட்டை வைத்திருப்பவர். என்னவோ இந்தியா மீது தான் தப்பு இருப்பது போல், பாக்., உடன் நாம் சமாதானமாக போக வேண்டும் என்று கூறி வருகிறார்.
சித்துவின் கோமாளித்தனங்களைப் பார்த்து சில காங்., தலைவர்களே கூட எரிச்சல் அடைகின்றனர். அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறும்போது, ‛‛சமாதானமாக போகுமாறு முதலில் பாக்., பிரதமரிடம் கூறுங்கள். அதன் பிறகு மற்றவற்றை பேசலாம்” என்று கடுப்படித்தார்.பஞ்சாப்பின் காங்., முதல்வர் அமரீந்தர் சிங்கும் சித்துவை ‛கடித்து துப்புகிறார்’. ‛‛சித்துவுக்கு உண்மை நிலை தெரியாது. நான் ராணுவத்தில் பணிபுரிந்தவன். அவர் வெறும் கிரிக்கெட் வீரர்” என்றார் அமரீந்தர்.இப்படி ஆளாளுக்கு சித்துவை கண்டித்து பேசும் அதே நேரத்தில் டுவிட்டரில் துள்ளி விளையாடுகிறார் சித்து. மோடி பற்றி குறிப்பிட்ட அவர், ‛‛மன்னனுக்கு ஆபத்து இல்லாத போர் ஒரு போரே அல்ல. அது அரசியல்” என்று வடஇந்திய தத்துவ அறிஞர் பஞ்சாரி கூறியதை கோடிட்டு காட்டுகிறார். இதன் மூலம் மறைமுகமாக மோடியை சாடுகிறார்.இந்திய ராணுவ நடவடிக்கைகளை அரசியலாக்கக் கூடாது என்பது காங்., கொள்கை. ஆனால் சித்து எதையாவது உளறிக்கொட்டி, வம்பை விலைக்கு வாங்குகிறார். கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. ஒரு மூத்த காங்., தலைவர் கூறும்போது, ‛‛சித்துவின் கருத்துகள் தேவையில்லாதவை. தவிர்க்கப்பட வேண்டியவை” என்றார்.
ஆனால் இந்த விஷயத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தரின் செயல்பாடுகள், அக்கட்சியினரின் பாராட்டுகளை பெறுகின்றன. பாக்., எல்லைக்கே சென்று அபிநந்தனை வரவேற்பதாக அறிவித்தார் (ஆனால், விமானப்படை அதிகாரிகள் மட்டுமே செல்ல வேண்டும் என்பதால் அவர் செல்லவில்லை); புல்வாமா தாக்குதலில் இறந்த நமது வீரர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் சொன்னது என்று அமரீந்தர் அம்மாநில மக்களின் ஆதரவை பெற்று வருகிறார்.