இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் படை கடந்த 27–ந் தேதி சிறைபிடித்தது. 3 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் அவரை விடுதலை செய்தது. அவரை, இந்தியாவிடம் வாகா எல்லையில் ஒப்படைத்தது.நல்லெண்ண நடவடிக்கையின் அடிப்படையில் அவரை விடுதலை செய்வதாக அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். ஆனாலும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாக அவரை பாகிஸ்தான் விடுதலை செய்ய முன்வந்தது என தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக புலவாமா தாக்குதலை தொடர்ந்து எழுந்துள்ள பதற்றமான சூழலை தணிக்கிற விதத்தில் அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடுமையாக நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் ஜெனீவா உடன்படிக்கையின் அடிப்படையில் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார் என்று இந்தியா கருதுகிறது.
இந்த நிலையில் பி.பி.சி. (உருது) நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மெக்மூத் குரேஷி பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘நாங்கள் உங்கள் (இந்தியா) துயரத்தை அதிகரிக்க விரும்பவில்லை; உங்கள் குடிமக்கள் கஷ்டப்பட விரும்பவில்லை. நாங்கள் சமாதானத்தைத் தான் நாடுகிறோம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.
நிர்ப்பந்தம் காரணமாகவோ, கட்டாயத்தின் பேரிலோதான் அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார் என்பதை அவர் நிராகரித்தார்.
இது பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘அபிநந்தனை விடுதலை செய்ய நிர்ப்பந்தம் வரவில்லை. கட்டாயப்படுத்தப்படவும் இல்லை’’ என்றார்.
மேலும், இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தவும் தனது மண்ணை பயன்படுத்துவதை பாகிஸ்தான் அனுமதிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
‘‘புலவாமா தாக்குதலை பொறுத்தவரையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றதாக கூறப்படுவதில் இன்னும் குழப்பம் உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைமையை விசாரித்தபோது, இல்லை என்று பதில் வந்தது’’ என்றும் கூறினார்.
‘‘நாடு அல்லது பிராந்தியத்தின் அமைதியைக் குலைக்க தேச விரோத சக்திகளை பாகிஸ்தான் அனுமதிக்காது. பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகிறோம்’’ என மெக்மூத் குரேஷி கூறியதாக ஜியோ நியூஸ் கூறியது.