வட கிழக்கு சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு
வட கிழக்கு சிரியாவில் உள்ள குர்து நகரமான குவாம்ஸ்லியில் ஒரு மிகப் பெரிய வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.
இத்தாக்குதலில், குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பு, இத்தாக்குதலை தாங்கள் தான் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில், வெடிபொருட்கள் நிரம்பிய ஒரு கனரக வாகனம் பயன்படுத்தப்பட்டதாக தெரிய வருகிறது.
இது தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்ட படங்கள், இந்நகரத்தில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளதையும், கட்டிடங்கள் வெடிகுண்டு தாக்குதலால் கருமை படர்ந்து காணப்படுவதையும் காண்பிக்கின்றன.