யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பிலான பன்னாட்டு விசாரணைக்கு லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச உட்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தற்போது நாட்டில் கண்டறியப்பட்ட மிகப் பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
412 எலும்புக்கூடுகள் அடையாளம்
இதுவரை அங்கு 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 390 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சிறார்கள் உள்ளிட்ட பலரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நீதியமைச்சர் செம்மணிக்கு சென்று, இந்தக் கொடூரங்களுக்கு உரிய நீதி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். எனவே, சோமரத்ன ராஜபக்ச பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மேலும், மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் செம்மணி தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
கிடப்பில் போடப்பட்ட விசாரணை
அவரது தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் முன்னதாக 15 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. அதன் பின்னர், சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசு இது தொடர்பான விசாரணையை கிடப்பில் போட்டிருந்தது.

தற்போது செம்மணி மீண்டும் அடையாளம் காணப்பட்டு அகழ்வாய்வு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சோமரத்ன ராஜபக்ச பன்னாட்டு விசாரணையில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக அவரது மனைவி ஊடாக கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், செம்மணி மட்டுமன்றி அரியாலை மற்றும் கொழும்புத்துறை பகுதிகளிலும் இவ்வாறு புதைக்கப்பட்ட உடல்கள் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். எனவே, இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.












