காவிரியில் நம் ‘நீர் உரிமை’யை நாம் பெற ஏதுவாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு! இதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இன்னொருபக்கம் நீர்ப்பங்கீடு முறைக்குக் கள்ளிப்பால் ஊற்றிவிட்டு, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து பட்டை நாமம் சாத்துவதை செவ்வனே செய்து வருகிறது கர்நாடக அரசு.
இந்தச் சூழலில், “கர்நாடக – தமிழக காவிரி பிரச்னை தீர அருமையான மாற்றுத் திட்டம் இருக்கு. தமிழகத்துக்கு 900 டி.எம்.சி அளவுக்குத் தண்ணீர் கிடைக்கக்கூடிய நவீன நீர் மேலேற்றுத் திட்டம் கைவசம் இருக்கு. ஆனால், அந்தத் திட்டம் பற்றி கர்நாடக – தமிழக முதல்வர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லியும் அதனைச் செயல்படுத்த யாரும் முன்வரவில்லை. ஒருவேளை காவிரி பிரச்னை தீர்ந்தால், டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என்று எடுத்து டெல்டாவைப் பாலைவனமாக்க முடியாது என்று மத்திய அரசு நினைக்கிறதோ என்னவோ?!” என்று நொந்து புலம்புகிறார்கள் தமிழக விவசாயச் சங்கப் பிரமுகர்கள்.காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சுவாமிமலை சுந்தரவிமலநாதனிடம் பேசினோம்.
“டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக உள்ள ஜீவநதி காவிரி. டெல்டா மாவட்டங்களின் விவசாயத்துக்கு அந்தத் தண்ணீர் பயன்படுவதோடு, சுமார் 14 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. கர்நாடகாவில் மேகதாது, ராசிமணல் பகுதிகளில் அந்த மாநில அரசு அணைகள் கட்டுவதன் மூலம் தமிழகத்தின் காவிரி உரிமைக்குப் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. 177 டி.எம்.சி நீரை கர்நாடகம் நமக்குத் தர வேண்டும். அதற்காக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியும், மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக அந்தத் தீர்ப்பை நிறைவேற்றத் தயங்கிவருகிறது. இந்த நிலையில்தான், இரண்டு மாநிலங்களுக்கு இடையில் தண்ணீரை வைத்து ஏற்படும் மோதல்களைத் தடுக்கும் நோக்கில், தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமாகும் வகையிலான புதிய திட்டத்தை மத்திய – மாநில அரசின் பார்வைக்குக் கொண்டு போயிருக்கோம்” என்றவர் தொடர்ந்தார்.
“கர்நாடக அரசு, தங்கள் மாநிலப் பாசனப் பரப்பான 7 லட்சம் ஏக்கரை கடந்த 40 ஆண்டுகளில் படிப்படியாக 20 லட்சம் ஏக்கராக உயர்த்தியிருக்கிறது. 1972 ல் மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கைப்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் 28.21 லட்சம் ஏக்கரும், கர்நாடகாவில் 6.81 லட்சம் ஏக்கரும், கேரளாவில் 53 ஆயிரம் ஏக்கரும் வேளாண் சாகுபடி செய்துவருகிறது. நதி நீர்ப் பங்கீடு குறித்து எங்கள் அமைப்பின் ஆலோசகரும், தமிழகப் பொதுப்பணித்துறையில் காவிரி வடிநிலக்கோட்ட கண்காணிப்புப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுப்பெற்றவருமான நடராஜன், மத்திய அரசுக்குப் பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு யோசனையை முன்வைத்தார்.