கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக அடித்ததால் பொது மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி ஒகி புயல் வீசியதில் மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து விழுந்துவிட்டதால், வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாகக் குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 44.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 170.20 மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகக் கொட்டாரத்தில் 50.2 மி.மீ மழை பெய்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 107.60 மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகச் சுருளகோட்டில் 18.6 மி.மீ மழை பெய்துள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் பரவலாகப் பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. மழை காரணமாக நீர்நிலைகள் நிறைந்து வருவதால் விவசயாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.